குலதெய்வம்:
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்தப் புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்தத் தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களாகவும் நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களையே நம் குலசாமிகளாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிநடத்தும் சக்தி கொண்டது. தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்..
'குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது'. 'குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது'. 'குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும்' என்னும் பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்பினை உணர்த்துவன. நாள் செய்யாததைக் கோள் செய்யும். கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும்' என்பது பழமொழி. நடக்காத காரியங்களையும் நடத்தித் தரும் வலிமை குல தெய்வங்களுக்கு உண்டு.
குலதெய்வத்தின் ஆற்றல்: குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்கிறார்கள் அருளாளர்கள்..
குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது. மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரியது. ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு தமிழ்நாட்டில் சமய வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்த ‘ராபர்ட்ரெட்பீல்ஸ்’ என்ற சமூகவியல் அறிஞர், தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் அதே அளவுக்குக் குல தெய்வ வழிபாடும் உள்ளதாக எழுதி உள்ளார். குல தெய்வ வழிபாடே தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது. தற்போதும் இருக்கிறது. இனியும் இருக்கும்.
வணங்கும் முறை: ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்… குலதெய்வத்தைத் தினமும் வணங்கவேண்டும். குலதெய்வக் கோயிலுக்குத் திங்களுக்கு ஒரு முறையேனும் சென்று வழிபட வேண்டும்..காருவா (அமாவாசை) வெள்ளுவா(பெளர்ணமி) முதலான நாட்களில் மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்.நம் வீட்டில் எந்தச் சிறப்புகள் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாக் கொள்ளவேண்டும். குலதெய்வத்துக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதை முறையே செய்து வரவேண்டும். குலதெய்வ சந்நிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம் என்று பொருள் ஆகும். நாம் அங்கே போய் நின்று… அங்கு சிறப்பாக வெளிப்படும் அந்த சக்தியைத் தொழும் போது, நம் முன்னோர்கள் நீத்தார்களாக இருந்து நம்மை வாழ்த்துவார்கள். அவர்கள் எப்போதுமே நம்மைக் காத்து அருள்புரிவர்.
எந்த ஒரு குடும்பம், குல தெய்வத்தின் அருளாசியை முழுமையாக பெற்றிருக்கின்றதோ, அந்த குடும்பத்தின் குலம் தழைத்து, செல்வ செழிப்போடு சிறப்பாக வாழும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒருசெய்தியே.
பொதுவாகக் குலதெய்வத்தை நாம் மறந்திருந்தாலும் குலதெய்வம் நம்மை மறப்பதில்லை. நமக்காக அது காத்திருக்கும். எப்படிப் பெற்றோர் பிள்ளைகளைத் தேடிக் காத்திருப்பார்களோ அப்படிக் காத்திருக்குமாம்
வீட்டில் எந்த விதமான நற்செயல் அழைப்பிதழ்களிலும் குலதெய்வத்தின் பேரைக் குறிப்பிடுவது வழக்கம்..திருமண அழைப்பிதழ் அடித்தவுடன் முதலில் குலதெய்வத்தின் காலடியில் வைத்து அழைப்பு விடுப்பர். திருமணம் முடிந்த பின்னர் முதலில் குலதெய்வக் கோயிலுக்குச் சென்ற பின்னரே மற்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவர்.குழந்தை பிறந்தால் முதல் குழந்தைக்கு குலதெய்வத்தின் பெயரையே வைப்பர் ஒரு குடும்பத்தில் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்துவது, காது குத்தல் எனக் குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது இன்றுவரை வழக்கமாக வந்துள்ளது. சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு உடனே செல்ல முடியாவிட்டால், குலதெய்வத்தை நினைத்து அவர்கள் குடும்ப வழக்கப்படி பணத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது செலுத்தி வருவது நடைமுறையில் உள்ளது.
.பொதுவாகப் பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான் பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்…புகுந்த வீட்டில் ஒரு தெய்வம் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும்வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்தபிரச்சினையும் சமாளிக்ககூடிய ஆற்றலை தரும்.
செய்ய வேண்டுவன: நம் குலதெய்வம் நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நம் கையால் ஒரு நீராட்டு, ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே போதும். குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி, மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற சடங்குகளை விமரிசையாக நடத்துவர் . அக்கோவிலுக்குப் பொருள் உதவி செய்ய வேண்டும்.. குலதெய்வக் கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் திருப்பணிகளைச் செய்ய வேண்டும். கோயிலைத் தூய்மைப்படுத்துதல், தண்ணீர்த் தொட்டி அமைத்துக் கொடுத்தல், சந்நிதிகள் புதுப்பிக்க உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஸ்தல விருட்சங்களை அமைத்தல் முதலான செயல்களைச் செய்ய வேண்டும். குலதெய்வக் கோயிலுக்கு எண்ணெய், திரி முதலானவற்றை வழங்கலாம். திருவிழாக் காலத்தின் போது சுவாமி திருவீதியுலா வருவதற்கு வசதியாக, உரிய வாகனங்களைச் செய்து கொடுக்கலாம் என்கிறார்கள் சமயச்சான்றோர்கள். நமது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதைச் செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வ வழிபாட்டால் பெறும் பயன்கள்: குலதெய்வ வழிபாடு என்பது நான் அறிந்தவரை சமூக நல்லிணக்கம்... கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தைப் பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்குக் கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது ஒரு கூட்டத்தார் அக்கூட்டத்தின் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து அந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். ஆகவே ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தைச் சேர்த்தவர்கள் பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்குக் குல தெய்வமாகும். இங்கு ஆண்டுதோறும் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணங்குவதுடன் தனது உறவுகளைச் சந்தித்து செல்கிறார்கள்..நோய்கள் நீங்கவும்,பிள்ளை வரம்கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புகின்றனர்.குல தெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.
- தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
முத்தம்மாள் நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101. |