இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன், அரிந்தெடுத்த கூந்தலை இடதுகையில் பிடித்தபடி காட்சி தரும் சிவனாரை காண்பது கோயிலின் தனி சிறப்பு. ஆடல்வல்லான், ஆனந்ததாண்டவம் ஆடிய திருத்தலம் இது, ஊரின் பெயர் ஆனந்ததாண்டவபுரம் என்றானது. இங்கே ஆனந்ததாண்டவமூர்த்தியாக, அழகுற தரிசனம் தரும் ஸ்ரீநடராஜ பெருமானின் அழகுத் திருமேனி அற்புதம்.இந்தத் தலத்தில் இரண்டு அம்பிகையர்! ஒருவர் பிரஹன்நாயகி.
இன்னொருவர் கல்யாணசுந்தரி அம்பாள். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று, மணக்கோலத்தில் காட்சி தந்ததால், அம்பிகைக்கு இந்தத் திருநாமம். சிவனடியாராக வந்த சிவனார் நீராடிய திருக்குளம் இங்கு உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிரஹன்நாயகி கல்யாணசுந்தரி சமேத பஞ்சவடீஸ்வரரையும் மானக்கஞ்சாற நாயனாரையும் வணங்கி வழிபட்டால், பிறவிப் பிணிகள் நீங்கும், மனதுள் நிம்மதி நிலைக்கும். |