மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் வீரபத்திரர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும். திங்கள்தோறும் வீரபத்திரர், பத்திரகாளி இருவரும் பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். உயர் பதவி, தலைமை பொறுப்பு கிடைக்க பக்தர்கள் வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்வித்து, குதிரையில் அமர்ந்த கோலத்தில் அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
இதற்கு கட்டணம் ரூ.450. அம்மை, தோல் வியாதி ஏற்பட்டவர்கள் வீரபத்திரர் பாதத்தில் தேங்காய் வைத்து பூஜித்து, தேங்காய் தண்ணீரைப் பருகியும், உடலில் தேய்த்தும் வேண்டிக் கொள்கின்றனர். இத்தல வீரபத்திரருக்கு "ராஜராயுடு' என்ற பெயரும் உண்டு. ஆவுடையின் மீது சிவலிங்கத்தை பார்த்திருக்கலாம்.
ஆனால், இக்கோயிலில், ஆவுடையின்மீது சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். இவரை "ஆவுடைசிவன்' என்கிறார்கள். வரசித்தி விநாயகர், காலபைரவர், எல்லம்மன், சண்முகர், இரட்டை லிங்கம், அகோரசிவன், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. இங்குள்ள கோபுரம் 3 நிலைகளை கொண்டது. |