இத்தல கிருஷ்ணர் ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தாலான திருமேனி ஆகும்.மூலஸ்தானத்தின் கிழக்கு கதவு பூட்டியே இருக்கிறது. விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே இந்த கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜைசெய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர். கிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பலகணி வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை "நவக்கிரக துவாரம்' என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் முன்புள்ள மண்டபம் தீர்த்த மண்டபம் எனப்படுகிறது. இங்கு தான் தினமும் இரவு சாமர பூஜை, மண்டல பூஜை நடக்கிறது. தீர்த்த மண்டபத்திலுள்ள கருடன் அயோத்தியிலிருந்து "வதிராஜா தீர்த்தா' என்பவரால் கொண்டுவரப்பட்டது.
"உடு' என்றால் நட்சத்திரம். "பா' என்றால் தலைவன். "உடுபா' என்பதே மருவி "உடுப்பி' ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக 27 நட்சத்திரங்களுடன் இத்தல கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான். |