இங்கு 24 மணி நேரமும் எரிந்துகொண்டே இருக்கும் நெய்விளக்கு பிரசித்திப் பெற்றது.ஸ்ரீராமானுஜர் இங்கே பல காலம் தங்கி, ஆராதித்துப் பூஜித்த ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்! ஆழ்வார்களின் திருநட்சத்திரத் திருநாளில், பிரபந்தம் மற்றும் வேத பாராயணம், சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. அதேபோல் மே மாதம் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இரண்யகசிபுவைக் கொன்றும்கூட ஸ்ரீநரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. அடுத்து, ஸ்ரீமகாலட்சுமியைப் பார்த்ததும், அவரது கோபம் தணிந்தது, உக்கிரம் காணாமல் போய், சாந்தம் குடிகொள்கிறது. ஆகவே இங்கே சாந்தமூர்த்தியாக, ஸ்ரீமகாலட்சுமியைத் தனது மடியில் அமர்த்தியபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீ நரசிங்கர். எனவே இவரின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். |