குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குழந்தை பிறந்தாலும் இறந்து விட்ட சூழ்நிலையில் அடுத்த குழந்தைக்காக காத்திருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். "கடா விளக்கு' எனப்படும் அணையாவிளக்கு இங்கிருக்கிறது. இவ்விளக்கு ரிக், யஜுர், சாம வேதங்களை குறிக்கும் வகையில் 3 அடுக்குகளை கொண்டது. குழந்தை இல்லாதவர்கள் இந்த விளக்கை ஏற்றி வழிபடும் இந்த வழிபாட்டை "உலப்பன்னா' என்கின்றனர்.
இவ்வாறு வழிபாடு செய்துபிறக்கும் குழந்தை நீண்ட ஆயுளுடனும், சிறப்புடனும் விளங்கும். "பல்குண தீர்த்தம்' மிகப்பெரிய குளமாக கோயிலின் உள்ளே இருக்கிறது. ஓணம் திருவிழா இத்தலத்தில் தான் ஆரம்பமானது என்கிறார்கள்.கேரளாவிலுள்ள கோயில்களிலேயே இங்கு தான் முதன் முதலாக ஓணத்திருவிழா துவங்கும். இதன்பிறகு தான் மற்ற கோயில்களிலும், வீடுகளிலும் ஓணக் கொண்டாட்டம் துவங்கும். பெருமாளே நேரில் அமைக்கச் சொன்ன கோயில் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. |