இத்தலத்து பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.மகரசங்கராந்திக்கு சொர்க்கவாசல்: பெருமாள் தலங்களில் மார்கழி வைகுண்ட ஏகாதசியன்று, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால் இங்கு ரங்கநாதர், மகரசங்கராந்தியன்று மாலையில் சொர்க்கவாசல் கடக்கிறார். இவ்விழா 9 நாட்கள் நடக்கிறது. அன்று மூலவர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார். மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியன்று விசேஷ பூஜை மட்டும் நடக்கிறது.
தை ரதசப்தமியை ஒட்டியும் ஒன்பது நாள் விழா நடத்தப்படுகிறது. விழாவின் ஏழாம் நாள் சூரிய உதய நேரத்தில், பெருமாள் "சூரியமண்டலம்' என்னும் வாகனத்தில் எழுந்தருளி, பின்பு தேரில் புறப்பாடாகிறார். இவ்வாறு ஒரே மாதத்தில் இங்கு இரண்டு பிரம்மோற்ஸவம் நடப்பது விசேஷம். ரங்கநாதர் யோக சயனத்தில் காட்சி தருகிறார். பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை, ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொள்கின்றன. |