யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம்.மூலவர் திருநாராயணர் மேற்கு நோக்கி, சங்கு, சக்கரத்துடன் நிற்கிறார். ஒரு கையில் கதாயுதம் உள்ளது. பத்ரி என்னும் இலந்தை மரமே இங்கு தலவிருட்சம். திருநாராயணப் பெருமாளை தரிசித்தவர்கள் பத்ரிநாத் சென்றுவந்த புண்ணியத்தை அடைவர். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரதநந்தினி என்னும் பெண் மூலவரின் பாதத்தில் வீற்றிருக்கிறாள்.
சாண்டில்ய மகரிஷி இத்தலத்தில் தவமிருந்து பெருமாளை பத்ரிநாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார்.ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருக்கோஷ்டியூரில் ராமானுஜருக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று, திருநாராயணபுரத்திலும் உண்டு. இங்கு ராமானுஜர் உபதேச முத்திரையுடன் காட்சி தருகிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திசெய்யும் பாவனையில் இருப்பதால் இவரை பேசும் யதிராஜர் என்று சொல்கின்றனர் |