இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன் காட்சி தருகிறார்.
அருகில் சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம். பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது. புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. |