இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. பிரகாரத்தில் சிவலோகநாதர், கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆனந்த தாண்டவமூர்த்தி, சின்மயானந்த விநாயகர், முருகன், சப்தகன்னியர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது. அம்பாள் வேயுறுதோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு, "ஆதித்ய அபயவராதம்பிகை' என்றும் பெயர் உண்டு.
இவளது சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம். இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம். இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர். புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கி ஆலோசனை கேட்டு அதன்பின்பே செயலாற்றுகின்றனர். |