இங்குள்ள அம்மன் விளைநிலத்திலிருந்து வந்து காடு மேடுகளை செழிக்கச் செய்வதால் இந்த முறை என்ன பயிரிட வேண்டும் என அம்மனிடம் உத்தரவு கேட்கும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. அதையே அந்த வருடம் பயிரிடுவர். இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதுவே இத்தலத்தின் சிறப்பாகும்.சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் சுண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
இதனால் சுண்டைக்காய்முத்தூர் என்றே ஊரின் பெயரும் அமைந்தது. ஒருநாள், சுண்டைக்காய் பயிரிட்ட நிலத்தில் ஏதோவொன்று தட்டுப்பட, அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து நிலத்தை தோண்டினர். அப்போது, பூமியில் இருந்து தென்பட்டது அம்மனின் விக்ரகம். அப்போது அங்கிருந்த பெண், நான் செல்லாண்டி ஆத்தா வந்திருக்கேன், இங்கேயே குடியிருக்கப் போகிறேன் என அருள் வந்து ஆடினாள். இதையடுத்து அம்மன் விக்ரகத்தை அருகிலேயே பிரதிஷ்டை செய்து, சிறிய கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். |