|
||||||||
முதல் மேடைப்பேச்சு |
||||||||
தமிழ் நாட்டில் டாக்டர் வரதராஜூலு நாயுடு திரு . வி . க ., டாக்டர் டி . எஸ் . எஸ் . ராஜன் ஆகியோரின் பேச்சு முறை மக்களைக் கவர்ந்தது . திரு . வி . க . வின் இனிய தமிழ் பலரது உள்ளங்களை ஈர்த்தது . அனைவரும் விடுதலை உணர்வு பொங்கப் பேசினார்கள் . ஈ . வே . ரா - வின் பேச்சு கர்ஜனையாக எதிரொலித்தது , சிக்கலான , நுணுக்கமான அரசியல் விஷயங்களை எல்லாம்அவர் பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய முறையில் விளக்கிப்பேசிய அந்தத் திறமை எல்லாருக்கும் பிடித்தது . இதை காமராசரும் மிகவும் ரசித்தார் . எல்லாத் தலைவர்களின் பேச்சும் பத்திரிக்கைகளில் வெளிவரும் . அதனைக் காமராசர் படிக்கத்தவறுவதில்லை . இதனால் காமராசரின் அரசியல் அறிவு விரிந்தது . விவாதத் திறமை வளர்ந்தது . குறைந்த வார்த்தைகளில் தெளிவு நிறைந்த எதிரிகளை வசீகரிக்கக் கூடிய பேச்சாகப் பேசுவார் . வெள்ளைக்காரன்மேல் அபிமானம் கொண்டவர்களையும் காமராசரின் பேச்சு மாற்றியது . காங்கிரஸ் கூட்டத்தில் வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி உள்ளூர் ஆட்களும் பேசலாம் என்ற எண்ணம் எழுந்ததால் உள்ளூர்ப் பேச்சாளர்களைப் பேச வைத்தார்கள் . இந்நிலையில் அடித்துப்பேசும் ஆற்றல் கொண்ட காமராசரும் மேடையில் பேச வேண்டும் என்று காங்கிரசார் விரும்பினார்கள் . தோழர் தங்கப்பன் வற்புறுத்தி காமராசரை சம்மதிக்கச் செய்தனர் . விருதுநகருக்கு மேற்கே பாவாடி ஜமீன் பக்கம் உள்ள எளியநாயக்கன்பட்டியில் குமாரசாமித் தேவர் என்பவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் . காமராசர் முதன் முதலாக அந்த மேடையில் பேச்சைத் தொடங்கினார் . காமராசர் சாதாரணமாகப் பேச்சுத்தமிழில் பேசினார் . “கூட்டத்தை நடத்தித் தர முன்வந்த பெரிய தனக்காரருக்கு நமஸ்காரம். உங்கள் முன்னாலே பேச சந்தர்ப்பம் கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோஷம். இப்போ நம் வீட்டுக்குள்ளே பக்கத்து வீட்டுக்காரன் வந்து அதிகாரம் செஞ்சா நீங்க விடுவீங்களா ? இப்படித்தான் ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிற ஊரிலே உள்ள வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கான் . நம்ம நிலத்திலே பயிர் செஞ்சு சாப்பிடுறோம் . அதே மாதிரி நம்ம ஊர்ப் பருத்தியை நாமே நூற்று வேட்டி கட்டினா இவனுக்கு என்ன ? ” என்று கேள்விக் குறி போட்டுப் பேசினார் . விவசாயிகள் சிரித்துச் சிரித்து ரசித்து கேட்டார்கள் . இவ்வாறாக காமராசரின் முதல்மேடைப்பேச்சு வெற்றிகரமாக அமைந்தது . தோழர்களிடத்திலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் பாராட்டு கிடைத்தது . பிறகு நகரங்களில் காமராசர் மாபெரும் கூட்டத்திலும் , அருமையாகப்பேசினார் . தமிழ் நடை மாறினாலும் , கூட்டத்தினரோடு உரையாடும் முறையை மாற்றாமல் பேசிவந்தார் . |
||||||||
by Swathi on 20 Aug 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|