ஐந்தாண்டுக் காலம் பல்வேறு சமுதாய மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றியதால் நல்ல பேரும் புகழும் கக்கன்ஜிக்கு வந்து சேர்ந்தன .
‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை’
என்றகுறளுக்கு இணங்கப் பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் கக்கன் நேர்மையான தன்னலம் கருதாத அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார் ,
1962 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1962-67 க்கான அடுத்த பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது . கட்சியின் ஆணைப்படி மேலூர்த் தனித்தொகுதியில் கக்கன் போட்டியிட்டார் . இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் கக்கனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்றாலும் , பொதுவுடமைக் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியது . உண்மைத் தொண்டனான கக்கன் , தமது எதிரணி வேட்பாளரைக் காட்டிலும் 16,495 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார் .
அந்தப் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தலைவராகக் காமராசரைத் தேர்ந்தெடுத்தனர் . அதனால் , மூன்றாவது முறையாக அமைச்சரவை அமைக்கும் வாய்ப்பினைக் காமராசர் பெற்றார் . அந்த அமைச்சரவையில் கக்கனையும் அமைச்சராகச் சேர்த்துக் கொண்டார் .
1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் கக்கன் அமைச்சர் பொறுப்பை ஏற்றார் . வேளாண்மை , உணவு , சிறுபான்மையினர் நலம் , மதுவிலக்கு , கால்நடைக் காப்பு , அரிசனநலம் ஆகிய மிக முதன்மையான பொறுப்புகள் கக்கனிடம் ஒப்படைக்கப்பட்டன . எம் . பக்தவச்சலம் , சோதி வேங்கடாசலம் , ஆர் , வெங்கட்ராமன் , வி . இராமையா , நல்லசேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் , பூவராகன் ஆகியோர் கக்கனுடன் அமைச்சரவையில் இருந்த பிற அமைச்சர்களாவர் .
|