காவல்தெய்வம் பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்புபூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.
மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர்.
சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது ராஜகோபால சுவாமியே தேரில் எழுந்தருளுவார். வைகுண்ட ஏகாதசியன்றும் இவரே சொர்க்கவாசல் கடக்கிறார். இத்தலத்து கிருஷ்ணர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால், இவரது பெயரில் இந்தக் கோயில் இருக்கும் இடம் கிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. |