|
||||||||
உலகம் உனக்காக - ச.சவகர்லால் |
||||||||
உலகம் என்பதே உனக்காக!—அங்கே
உலவும் காற்றும் உனக்காக!
நிலவும் வானும் உனக்காக!—மின்னும்
நட்சத் திரமும் உனக்காக.
காற்றைப் பிடித்துன் கைவைத்தே—உன்றன்
கட்டளை கேட்கச் செய்துவிடு!!;
ஆற்றின் வேக ஓட்டத்தை—உன்
அதட்ட லொன்றால் நிறுத்திவிடு.!
புயலைக் கைக்குள் அடக்கிவிடு!!—நடுக்கும்
பூகம் பத்தை நிறுத்திவிடு!!
அயர்வை உதறு! நெட்டிமுறி!—உன்
அறிவைக் கொளுத்து! எரியவிடு!
நெஞ்சை நிமிர்த்து! தோள்தூக்கு!—உன்
நினைப்பில் இமயம் கடுகாக்கு!
துஞ்ச லொழித்தே துடித்தெழுநீ! –உன்
தோளில் உலகை இளைப்பாற்று!
வானை உன்றன் வசப்படுத்து! –அங்கே
வலம்வரும் நிலவைச் சிறைப்படுத்து!
மீனைத் தோரண மாய்க்கட்டி –உன்
வீட்டின் அழகை மேம்படுத்து!
துன்பம் துடைக்கத் துடைப்பமெடு! –அங்கே
தோன்றும் தூசுகள் துடைத்துவிடு!
இன்பம் இடுப்பில் கட்டிவிடு! –எங்கும்
ஏகி விடாமல் நிலைப்படுத்து!
கையைச் சொடுக்கி உலகத்தை –உன்
கட்டளை கேட்கச் செய்துவிடு!
பையவே உன்றன் பார்வையினால் –எங்கும்
பசுமை நிலவச் செய்துவிடு!
பாவம் சுட்டுப் பொசுக்கிவிடு! –நல்ல
பண்புகள் வளர உரமூட்டு!
கூவம் நதியைக் கங்கையாக்கு! –அங்கே
கொள்ளை அழகாய்த் தோணிவிடு!
எல்லாம் உன்னால் முடியுமடா! –இங்கே
இருக்கிற உலகம் உனக்காக!
வல்லமை தன்னைப் பெற்றுவிடு! –-கவிதை
வாளைச் சுழற்று! வெற்றிபெறு.
- ச.சவகர்லால்
|
||||||||
by Swathi on 25 Apr 2016 0 Comments | ||||||||
Tags: Ulagam Ulagam Kavithai Jawaharlal Kavithai Kavithai about World Kavithai about Ulagam உலகம் உலகம் கவிதை | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|