கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும், - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும், குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும், குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும், விழைகுவ னேனும், தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்!
பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம் பக்கத் துறவின் முறையார், தயைமிக உடையாள் அன்னை - என்னைச் சந்ததம் மறவாத் தந்தை, குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளை, அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர் !
நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே நிறையக் குளிர்வெண் ணிலவாம். காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே கடல்மேல் எல்லாம் ஒளியாம், மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல மலைகளின் இன்பக் காட்சி மேலென எழுதும் கவிஞர் - தமிழின் விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் தேக்கிய கறியின் வகையும், தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித் தயிரோடு மிளகின் சாறும், நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில் நாவிலினித்திடும் அப்பம், உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே !
-புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
பாடலைப்பாடிய சமர்ப்பா குமரன் அவர்களைப்பற்றி அறிய:- https://muelangovan.blogspot.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88&fbclid=IwAR0CjgQ3jyZykW5hXpMBsDS_oA-6N6lTC-7_YA0DsLHzkg2FAenS1_tYImg
Video:
https://www.facebook.com/soundar.jeyabal/videos/10210913733599291/
|