|
||||||||
புலம்பெயர் மண்ணில் தமிழிசை! தேவகி பச்சமுத்து |
||||||||
தமிழிசை என ‘நா’ சொல்லும் போது நெஞ்சில் இனம் புரியத நெகிழ்வு உண்டாகிறது.இது நான் தமிழன் என்பதாலா அல்லது தமிழிசையின் ஆளுமையா என்றால் ஆளுமை என்பதே சரி. முனைவர் திருமுருகன் ஐயா அவர்கள் தமிழிசை குறித்த தமது உரை ஒன்றில் சொன்னார் ‘ஆட்சியில் இருந்தவர்கள் தெலுங்கர்கள் என்பதால் இசையரங்குகளில் மிகுதியாக தெலுங்குப் பாடல்கள் இருக்குமாம். நிகழ்ச்சியின் இறுதியில் ஒரே ஒரு காவடிச் சிந்து பாடுவார்களாம். அப்படி கடைசியாக பாடப்படும் தமிழிசையை கேட்பதற்காக தமிழர்கள் இசையரங்குகளில் காத்துக்கிடப்பார்களாம்.’ கடைசியாகப் பாடப்படும் ஒரு பாடலுக்கா என்ற வினாவும், வியப்பும் ஏற்படும். அதே நேரம் தமிழிசையின் ஆழம் பற்றிய வியப்பும், அந்த இசையின் ஈர்ப்பும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இசைக்கு மொழி இல்லை என்று சொல்வார்கள்.ஆனால் அந்த இசை தமிழ் மொழியில் இருக்கும் போது ஏற்படும் சுவையும் உணர்வும் இதமானது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட குமுக (சமூக) மாற்றங்களினாலும் அண்ணாமலை அரசர், திரு.சண்முகம் செட்டியார், திரு.கல்கி, திரு.இராசி போன்றவர்களின் தொண்டுகளினாலும் இன்று தமிழிசை பாடுவதும் கேட்பதும் மக்களிடையே பரவலாக உள்ளது. தமிழ் பதம், கிருதி, இராகமாலிகை போன்ற வெவ்வேறு வடிவங்களில் தமிழில் பாடல்கள் ஏராளமாக உள்ளன.இப்போது சில அரங்குகளில் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு முழு நிகழ்ச்சியும் நடத்தப்படு கிறது. மம்மது ஐயா அவர்கள் நமது பாரம்பரியப் பண்களில் பரவலாகப் பாடப்படும் 100 பண்களைத் தேர்ந்தெடுத்து, பிறகு அப் பண்களுக்கு உரிய பாடல்களைத் தேர்ந் தெடுத்து அவைகளை வாய்ப்பாட்டாகவும், இசைக்கருவி இசையாகவும் பதிவு செய்து குறுந்தகடாக வெளியிடுவது என்பது நமது பிள்ளைகள் இலக்கியத்தையும் தமிழிசையையும் எளிதாகக் கற்றுக்கொள்ள வழிவகுக்கும். தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளில் ஒலிக்கும் தமிழிசையானது அனைத்துத் தமிழ் நெஞ்சங்களையும் மகிழ்விக்கும் காரணியாகவும், அவர்களின் அடையாளங்களைப் புதுப்பிக்கும் தூண்டுகோலாகவும் விளங்குகிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து தமிழிசைப் பாடகர்களை அழைத்துவந்து முழு தமிழிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பிறந்து வளரும் சிறார்களுக்கு விழாவில் தமிழிசை பாடும் வாய்ப்பையும் வழங்கி வருகிறார்கள். அமெரிக்காவின் தலைநகரில் ஆண்டுதோறும் நடைபெரும் தமிழிசைப் போட்டியானது அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களும் தங்கள் மாநிலங்களில் தமிழிசையை ஊக்குவிக்கத் தூண்டுகிறது. அமெரிக்கத் தமிழ்ச் சங்க நிகழ்வில் தமிழிசைப் பாடல்கள் மிகுதியாகப் பாடப்படுகிறது.அமெரிக்க கர்நாடக இசை விழாவிலும் தமிழ்ப்பாடல்கள் மிகுதியாக ஒலிக்கிறது.அமெரிக்கப் பாடலாசிரியர்கள் தமிழ்ப் பாடல்களை மிகுதியாகப் பயிற்றுவிக்கிறார்கள். இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு புறநானூறு, சிலப்பதிகாரம், திருவருட்பா, தேவாரம், திருப்பாவை, காவடிச் சிந்து என அனைத்து வகையானத் தமிழிசைப் பாடல்களையும் கற்றுத்தருகிறார். மேலும் அலங்காரம், கீதம், வர்ணங்கள் அனைத்தையும் தமிழ்ப் பாடல்கள் வழியாகவே கற்றுக்கொடுக்கின்றார். அமெரிக்க மண்ணில் வளரும் பிள்ளைகள் புறநானூறு, இனிமைத் தமிழ்மொழி, இசைத்தமிழில் பிள்ளைதமிழ் போன்ற குருந்தகடுகளை வெளியிட்டிருப்பது என்பது தமிழிசையானது தாய் மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் மண்ணிலும் தழைத்தோங்கு வதைப் பறைசாற்றுகிறது. இவை நம் பண்பாட்டையும், தமிழிசையையும் அடுத்த தலைமுறைக்குச் சென்றடையும் என்ற நம்பிக்கை விதையை நம்மில் இட்டுச் செல்கிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழிசை நிகழ்ச்சியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இம் முன்முயற்சி பல தமிழிசைப் பாடகர்களை உருவாக்கும்.அமெரிக்காவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் தமிழிசை முழங்க இது வழிவகுக்கும். |
||||||||
by Swathi on 28 Jan 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|